Tuesday, November 9, 2010

பிதாமகர் பீஷ்மர் பார்ட் 5


சுயம்வரத்தில் பங்கு பெறுதல்
விண்ணும் மண்ணும் போற்றிய தேவவிரதன்
பீஷ்மர் என்றே ஆயினன் - மீனவ தலைவனும்
மகிழ்ந்தே நீரே வீரர் நீரே இவளின் தகப்பன்
நீரே இவளை உடன் அழைத்துச் சென்று
உம் தந்தையிடம் ஒப்படைபீர் என்றே
தன் அழகிய அன்பு மகளாம் சத்தியவதியை
பீஷ்மனுடனே அனுப்பினான்

தந்தைக்காக தன் வாழ்வையே தியாகம் செய்த
உத்தம புத்திரன் பீஷ்மன் சத்தியவதியுடன் வந்தே
தந்தையிடம் சேர்ப்பித்தான் அவளையே - மகிழ்ந்த
தந்தையும் சத்தியவதியை மணந்தே வாழ்ந்தனன்
நல் வாழ்க்கையை இனிமையுடன்

இல்லறமாம் நல்லறத்தில் இனிதே பெற்றனர்
மக்கள் இருவரை சித்திராங்கதன் முதல்வனும்
விசித்திரவீரியன் இரண்டாமவுனுமாகவே
இருவரும் நன்கே வளர்ந்தனர்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக

சந்தனுவைத் தொடர்ந்து சித்திராங்கதன் ஆள
சித்திராங்கனும் கந்தர்வன் ஒருவனிடம் போர் புரிந்து மாள
அவன் சந்ததி அற்ற காரணத்தால்
இளவல் விசித்திர வீரியன் பட்டம் ஏற்க
பாலகன் என்ற காரணத்தால் தக்க வயது வரும் வரை
பீஷ்மரும் பரிபாலனம் செய்து வந்தார் ராஜ்யத்தை

இளவல் விசித்திரவீரியனும் பருவ வயதை எட்டினான்
திருமணம் செய்விக்க கருதியே காசி ராஜ்ஜியம் சென்றார்
காசி ராஜனின் மகள்களுக்கு சுயம்வரம் என்றே செய்திக் கேட்டு
பல தேசத்து ராஜகுமாரர்கள் அவையில் இருந்தனர்
தங்கள் பெயரினை சுயம்வரத்திற்கு கொடுத்து
பீஷ்மரும் தன் பெயரை கொடுக்க திகைத்தனர் அனைவரும்

முதுமை அடைந்தவரும் திருமணம் புரியமாட்டேன் என்றே
சபதம் ஏற்றவரும் இவர் ஏன் இங்கு வந்தார் இவருக்கேன்
திருமணம் என்றும் அனைவரும் இகழ்ந்தனர் பீஷ்மரை
பாவம், அவர்கள் அறியார், சொன்ன சொல் காக்கும் நம்
உத்தம வீரர் தன் தம்பியின் நிமித்தம் வந்தார் என்பதை

கன்னிகை மூவரும் கிழவர் என்றே பீஷ்மரை ஒதுக்க
கோபம் கொண்ட பீஷ்மரும் அனைவரையும் யுத்தத்துக்கு அழைத்து
அனைவரும் புறமுதுகிட்டு ஓட வீரன் சால்வன் மட்டும் விடாது தன்
திறமையை முடிந்த மட்டும் காட்டி இறுதியில் தோல்வியைத் தழுவ
கன்னிகைகள் மூவரையும் தேரில் ஏற்றி அஸ்தினாபுரம் அடைந்தார்


No comments: