சந்தனு வாக்கை தவறியதால் கங்கையும் மகனுடன் சென்று விட்டாள்
செல்லும்போதே சந்தனுவிடம் தன்னை யாரென என்றே அறிவித்தாள் 
சொன்னாள் முன்னாள் நிகழ்வை சந்தனு ராஜா கேட்பதற்கே 
 ரிஷிகளும் முனிவரும் போற்றும் கங்கை நதியின் தேவதை நானே 
அழகிய பசுமையும் குன்றுகளும் கொண்ட மலைசாரல்
அங்கே வசிஷ்ட மகரிஷியின் ஆசிரம வாசம் 
அஷ்ட வசுக்களும் அங்கே தம் தம் பத்தினியருடன்
ஓடி ஆடி விளையாட அங்கே கண்டனர் கண்ணுக்கு இனிய காட்சி 
வசிஷ்டரின் வளர்ப்பாம் நந்தினி பசு    
திவ்ய மங்கள ரூபமான அழகிய பசு 
தன் கன்றுடன் மேய்வதை கண்டே 
மையல் கொண்டே  அப்பசுவினைக் கேட்டே 
அடம் பிடித்தாள் ஒரு வசுவின் பத்தினியே 
ரிஷியின் பசுவது வேண்டாம் நமக்கு தேவர்கள் நமக்கு  பசு எதற்கு  
ரிஷியின் சாபம் வேண்டாம் நமக்கு  சொல்வதை கேட்பாய் சதியே நீயும் 
எத்தனை சொல்லியும் கேளா சதியே பதியை கெஞ்ச கொஞ்சி 
பூமியில் உள்ள தோழிக்கே பரிசாய் அளிக்க தேவை இப்பசுவே
உடனே தாருங்கள் மறுமொழி வேண்டாம் என்று கூறவே  
மதியின் மயக்கம் முனிவரின் சாபம் மறக்க 
வசுக்களும்  திருடியே சென்றனர் பசுவுடன் கன்றையும் 
வசிஷ்டரும் திரும்பினார் தன் குடிலுக்கே 
பசுவும் கன்றும் காணாது திகைத்தார் சற்றே 
அறிந்தார் நடந்ததை , கொண்டார் சீற்றமும் 
சபித்தார் வசுக்களை மானுடராக பிறக்கவே 
சாபம் அறிந்த வசுக்களுமே வந்தானர் விரைவாய் 
வசிஷ்டரை பணிந்தே மன்னிப்பு கேட்க 
வசிஷ்டரும் இரங்கியே சாபத்தை குறைத்தார் 
பூமியில் பறப்பது திண்ணமே ஆனால் சிறு மாற்றம் 
குற்றம் புரிந்தவன் பல நாள் வாழ்ந்து புகழ் பெற 
மற்றவர் உடனே விடுதலை   அடைவர் என்றதும் 
வசுக்கள் சென்றே கங்கையை வேண்டினர் 
பூமியில் பிறந்தே நற் கணவனை  அடைந்து  
எங்களை பெற்று உடனே நீரில் வீழ்த்தி 
எங்களுக்கு விடுதலை அளிப்பாய் என்றே 
வசுக்கள் மீது கொண்ட இரக்கம்  பூமியில் நானும் வந்தேன் 
வசுக்கள் சாபம் தீர்க்க கொண்டேன் உன்னை  மணாளனாக 
வசுக்கள்  சாப விமோசனம் பெறவே வீசினேன் அவர்களை கங்கையில் 
எட்டாம் வசுவே இவன் பூமியில் புகழ்பட வாழ்வான் 
அவனை வளர்த்தே உன் கையில் நானும் கொடுப்பேன் 
என்றே கூறி கங்கையும் சென்றாள் குழந்தையுடன் 
   தொடரும் 
 
No comments:
Post a Comment